
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒருமாத கால அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த சவுதி மன்னர் சல்மான் ரியாத் நகருக்கு திரும்பினார்.
ரியாத்:
பொருளாதார நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் சவுதி அரேபியாவை சரிவில் இருந்து மீட்கும் அரசின் புதிய பொருளாதார புனரமைப்பு திட்டத்துக்கு அந்நாட்டின் மந்திரிசபை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெயை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற, பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தேசிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மேலும், வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு அந்நாடு விண்ணப்பித்துள்ளது. கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சவுதி அரசுக்கு சொந்தமான ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியுமான முஹம்மது பின் சல்மான் கடந்த ஆண்டில் முடிவு செய்தார்.
இந்நிலையில், சவுதி நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் தற்போது ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். சவுதி இளவரசர்கள் 25 பேர் உள்பட சுமார் ஆயிரம் உயரதிகாரிகள் கொண்ட பெரிய குழுவும் அவருடன் சென்றிருந்தது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்த மன்னர் சல்மான் தங்களது நாட்டின் பொருளாதாரச் சரிவை சமநிலைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். கடந்த வியாழக்கிழமை சீனா - சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையில் மட்டும் 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலத்தீவு நாட்டுக்கு செல்லவிருந்த மன்னர் சல்மானின் முந்தைய பயண திட்டம் அந்நாட்டில் பரவி வரும் விஷக் காய்ச்சலால் ரத்து செய்யப்பட்டது, இதைதொடர்ந்து அவர் நேற்று ரியாத் நகரை வந்தடைந்ததாக சவுதி ஊடகங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.